Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Friday, February 1, 2013

காத்திருப்பு

                     

            “இப்ப வந்தவங்கள்ல யார் முதல்ல வந்த்து” அந்த
விஸ்தாரமான மருத்துவமனை ரிசப்ஷனில் நர்ஸ் வந்து கேட்டதும்
 நான் தான் சிஸ்டர் என்று சத்தமாகக் குரல் கொடுத்தபடி எழுந்து
வருவதற்குள் என் மகன் கணேஷின் பெயரைக் கொடுத்தேன்.

            சொல்லிவிட்டு பெரியவரின் முகத்தைப் பார்க்காமல்
இருக்கைக்கு வந்து கணேஷை கொஞ்சுவது போல் நடித்தேன். எதேச்சையாக பட்டது அந்தப் பெருசின் தீர்க்கமான பார்வை.  இருக்கட்டுமே, அந்த பெருசுக்கு வீட்டில் என்ன அப்படி வெட்டி முறிக்குற வேலை இருக்கப் போகிறது,  நம்ம மாதிரி ஆயிரம் வேலை காத்திருக்குமா என்ன?  குழந்தையை வெச்சிக்குனு நம்ம படுற அவஸ்தை அந்த கிழத்துக்கு இல்லையே.  எனக்கு அப்புறம் தான் போய் மருத்துவரைப் பாக்கட்டுமே.  குடியா மூழ்கிடப் போகுது.

            கிழம் என்னிடம் வாக்குவாதம் ஏதும் செய்யவில்லை.  நானும் கண்டுக்காமல் அலைபேசியை   நோண்டிக் கொண்டிருந்தேன்.  பெயர் அழைத்ததும் புயலென சீறி முழுதும் குளிரூட்டப்பட்ட மருத்துவர் அறையினுள் நுழைந்தேன்.  சிகிச்சைக்குப் பின் வெளியேறிய போது “மருத்துவர் சாப்பிடச் சொல்கிறார், பத்து நிமிடங்கள் அகும், காத்திருங்கள்” என நர்ஸ் சொன்னது காதில் தேன் ஊற்றியது போல் இருந்தது.

           அப்பா, நாம தப்பிச்சோம்.  இந்நேரம் நியாயப்படி அந்தப் பெருசு போயிருந்தா இன்னொரு அரைமணி நேரம் காத்திருந்திருப்போம்.  பொய் சொன்னாலும் இம்முறை பொருந்தச் சொன்னோம்.  என் பொய்க்கு நானே நியாயம் கற்பித்து சப்பைக்கட்டு கட்டிக் கொண்டேன்.  மனதில் அரை மணி நேரத்தை மிச்சப்படுத்திய உற்சாகக் களிப்பு.

          மூச்சு வாங்கியபடி மறுபடியும் மருத்துவமனையினுள் நுழைந்தபோது என்னை ஆட்டிப்படைத்த அந்த 20 நிமிடங்கள் கரைந்து போயிருந்தது,  தவறவிட்ட அலைபேசியை கொளுத்தும் வெயிலில் லொங்கு லொங்கென மிதிவண்டியில் தேடி அலைந்த்தில் உடலெல்லாம் எரிந்த்து.  ஊசி குத்தப்பட்ட கணேஷிற்கு தேய்த்துவிட வேண்டி மருத்துவரின் மேஜை மேல் வைத்ததாக ஞாபகம் வரவே வந்தேன்.

              அறையினுள் நுழைந்தால் மேஜையின் கீழே விழுந்திருந்த அலைபேசியின் பக்கத்தில் அந்தப் பெரியவரின் கால்கள் இருந்தது.  மருத்துவரின் அனுமதியோடு முதியோரின் கால்களை ஒத்தச் சொல்ல யத்தனிக்கையில் ஏனோ என்னிடம் வார்த்தைகள் வரவில்லை.  இப்போதும் அவரிடம் அதே தீர்க்கப் பார்வை.  என் மனதில் இருந்த குப்பையை வெளியே எடுத்து கொட்டும்படியாக இருந்தது அந்தப் பார்வை.



4 comments:

  1. //அறையினுள் நுழைந்தால் மேஜையின் கீழே விழுந்திருந்த அலைபேசியின் பக்கத்தில் அந்தப் பெரியவரின் கால்கள் இருந்தது. மருத்துவரின் அனுமதியோடு முதியோரின் கால்களை ஒத்தச் சொல்ல யத்தனிக்கையில் ஏனோ என்னிடம் வார்த்தைகள் வரவில்லை. இப்போதும் அவரிடம் அதே தீர்க்கப் பார்வை. என் மனதில் இருந்த குப்பையை வெளியே எடுத்து கொட்டும்படியாக இருந்தது அந்தப் பார்வை.//

    நல்லா இருக்கு. காலில் விழுவது போல குனிய வேண்டியதோர் நிலை. மெளனமாகவே முடிவு. யாருமே பேசவில்லை. பேசவும் முடியவில்லை. மனதினில் குப்பை .... சூப்பர். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. மனதின் குப்பைகளை களைய வாய்ப்பு வந்தே தீருகிறது தோழி

    ReplyDelete
  3. ஏங்க,
    சூப்பர் போங்க. பெரியவங்கள மதிக்கனும், பொய் சொல்லக்கூடாது, attitude இருக்கனும். இதெல்லாம் இல்லாத மனிதருக்கு என்னைக்காவது ஒருநாள் தலைகுனிவு வரும்னு சுருங்கச்சொல்லி விளங்க வச்சுடிங்க. ஆனா ஒன்னு பாருங்க, தப்பு பன்னினாலும் நல்லவங்களுக்குத்தாங்க மனசு மாறும். ezhil சொல்லி இருக்கிறமாதிரி குப்பையை களைய வாய்ப்பு வந்தாலும், நல்லவங்கதான் 'அது' குப்பைன்னு ஒத்துக்குராங்க, இல்லயா? என்ன சொல்லுரிங்க?
    - கண்ணன், தஞ்சையிலிருந்து

    ReplyDelete