Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Sunday, July 17, 2011

ஆயா வீடு

‘சேவூருக்கு இரண்டு டிக்கெட்’ என நடத்துனரிடம்
சொல்லி பயணச்சீட்டு வாங்கிக் கொண்டதுமே மனம்
சேவூரை நோக்கி ஓடத் துவங்கிவிட்டது.

“பூவோட பொட்டோட ஆயாவ கடைசியா ஒருதரம்
பாத்துட்டு போயிடு” என்ற அம்மாவின் டெலிபோன் பேச்சுக்கு
அலையடித்தாற்போல் வந்து சேர்ந்தாயிற்று டில்லியிலிருந்து.
மகன் விக்ராந்த் மடியில் படுத்துக் கொள்ள முன்னோக்கி
பாயும் பேருந்திற்கு சவால் விட்டபடி நினைவலைகள்
பின்னோக்கி பாய்ந்தது என்னுள்.

அந்தக் காலத்திலேயே இரண்டு மாடிகள் கொண்ட பெரிய
வீடு ஆயாவுடையது.  வருடத்திற்கொருமுறை வரும் முழு ஆண்டு
பரிட்சை லீவில் நான்கு பெண்களையும் பேரப்பிள்ளைகளையும்
வரவேற்க வருடம் முழுவதும் காத்திருப்பாள் ஆயா.  சொல்லி
வைத்தாற்போல் சித்திரை திருவிழாவுக்கு ஓரிரு நாட்கள்
முன்னதாகவே அனைவரும் ஆஜராகி விடுவோம்.

பத்து நாட்களாக பாடுபட்டு செய்த முறுக்கு, அதிரசம்,
எள்ளடை பலகாரங்களை வந்ததும் வராததுமாய் வாய்க்கு மெல்ல
கொடுப்பாள்.  கல்லெண்ணெய் வாசத்துடன் ஆயாவின் வியர்வை
வாடையும் சேர்ந்து வீசும்.

ஆளுக்கொரு ஆளுயர அலமாரியென ஒவ்வொரு பெண்ணுக்கும்
ஒதுக்கி வைத்திருப்பாள்.  வந்தவுடன் பெட்டிகளிலிருந்த துணிகளை
அடுக்கவே நேரம் ஓய்ந்துவிடும் அம்மாவுக்கும் சித்திகளுக்கும்.

நாங்கள் இருக்கும் அந்த பதினைந்து நாட்களும் நாடாளுமன்ற
குளிர்கால கூட்டத் தொடர் போல் வீடு அமளி துமளிப்படும்.
மாலையானால் மொட்டை மாடியில் ஓடி பிடித்து விளையாடும்
சத்தம் திமுதிமுவென கீழே கேட்கும்.  “சுண்ணாம்பு காரை,
பாத்து… பாத்து” என பயம் கொள்வாள் ஆயா.

கட்டிக் கொடுத்த பெண்களை சமையலறைக்குள் அனுமதியாமல்
உட்கார்த்தி வைத்து மொத்த சமையலையும் ஒத்தை ஆளாய் நின்று
செய்துவிடும் சாமர்த்தியம் ஆயாவிடம் இருந்தது.  அந்த நாட்களுக்கு
மட்டும் பத்து தேய்க்கவும் துணி அலசவும் சாமார்த்தியமாய் பேசி
ஆள் பிடித்து இருப்பாள்.

இடியாப்பம் என்ன, பனியாரம் என்ன, அப்பம் என்ன…
அத்தனையும் செய்ய அதிகாலை நான்கு மணி முதற்கொண்டு
அடுப்படியில் பாத்திர உருட்டல் சத்தம் கேட்கும்.

“சீக்கிரம் எழு, சீக்கிரம் எழு” என எங்களை துன்புறுத்தும்
அம்மாக்களும் சித்திகளும் 9 வரை தூங்கிக் கொண்டிருக்க நாங்கள்
ஆயாவுடனே எழுந்து ஆற்றுக்குப் போய் குளித்து வருவோம்.

வாரத்திற்கு ஒன்றென இரண்டு சினிமாக்கள் செல்வதுண்டு. 
பலகாரம் வாங்கி கட்டுபடி ஆகாது என வீட்டிலேயே இரண்டு
பித்தளை வாளியில் அள்ளி வந்திருப்பாள்.  சரியாக ‘இடைவேளை’
சமயத்திற்கு முன் அனைவர் கைகளுக்கும் வரிசையாக உப்பு
உருண்டையும் உதிராத சிமிலியும் வந்து சேர்ந்திருக்கும்.  விரைவில்
உண்டு பாப்கார்னுக்கு ஒரு அழுகை போடலாம் என்பதற்குள்
‘இடைவேளை’ முடிந்து படம் ஆரம்பித்திருக்கும்.  அப்படி ஒரு
பெரிய உருண்டை பிடித்திருப்பார் அந்தக்கால திருப்பதி லட்டு
போல.  படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை ஒன்றுக்கு ரெண்டுக்கு
என இடையிடையே எழும் வாண்டுகளுக்கு ஈடுகொடுத்தபடியே
பின்னே பறப்பார்.  முழு படத்தையும் அவர் உட்கார்ந்து
பார்த்ததாய் ஞாபகமில்லை.

மாடியெங்கும் எங்கள் சொப்பு சாம்ராஜ்யம் களை கட்டும்.
யாருக்கும் தெரியாமல் மறைந்து எடுத்துச் செல்லும் அரிசியை
கொண்டு மாடியில் தனியாக உலை பொங்கும்.  வழி முச்சிலும்
சிந்தியிருக்கும் அரிசியை ஒன்றுவிடாமல் பொருக்கி எடுத்தபடியே
‘என்ன பருப்பு, என்ன அளவு’ என்பதான சித்திகளின்
கேள்விகளுக்கான விளக்கங்களும் நடந்து கொண்டிருக்கும்.

இரவு 11 மணி வரை நாங்கள் ஆடும் ‘வுட்டை’ கல்லில்
ஆயாவும் சேர்ந்து ஆடுவாள்.  அவருடன் செட்டு சேரவே
அனைவருக்குள்ளும் சண்டை மாயும்.  கல்லை மேலே போட்டு
பத்து காயானாலும் வழித்து எடுக்கும் லாவகத்தை ‘ஆ’ வென
வாய் திறந்து பார்த்துக் கொண்டிருப்போம்.  பேத்திகளின் கைகளை
குத்தாத, கீறாத வழவழப்பான ஜல்லிக் கற்களாக தேடிப்பிடித்து
வைத்திருப்பாள்.  வருடா வருடம் கூடுமேயன்றி கழியாது.

ஒருதரம் என் மிக நீள தலைமுடியை கல்லூரி சேரும்
தருவாயில் பாதியாக வெட்டிக் கொண்டதில் பெரும் வருத்தம்
அவளுக்கு.  அவ்வப்போது சொல்லி சொல்லி அலுத்துக் கொண்டாள்.
பெரிய சித்தி மகளின் நீள ஹைஹீல்ஸை பார்த்து விக்கித்துதான்
போனாள்.  இடுப்பு வலி வரும் என சொல்லியும் அவள் கேளாது
போகவே அவள் தூங்கும்போது தேங்காய் வெட்டும் வெட்டுக்கத்திக்
கொண்டு செருப்பு குச்சிகளை வெட்டிப் போட்டதில்
எங்களுக்கெல்லாம் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப் போனது
தனிக் கதை.

சரியாக ஊருக்கு கிளம்பும் முன் நான் இரவில் ஆயா அரைத்து
வைத்துவிடும் மருதாணி பாயிலும் தலையணை உறையிலும் படிந்து
போய் சிவந்திருக்கும்.  ‘அதை தோய்த்து விடும்மா’ என்று சொன்ன
அம்மாவிற்கு பதிலாய் ‘பாய் வாசமும் சிவப்பு கறையும் ஒரு மாதத்திற்கு
உங்களை ஞாபகப்படுத்தும்.  இருக்கட்டும்’ என்பாள்.  பாதி நகம் முழு
நகம் என மருதாணி சிவப்பு நகத்தை விட்டு மறையும் வரை நாங்களும்
அவரை நினைத்திருப்போம்.

ஒரு கடும் வெக்கை நாளில் கடைசி சித்தியின் பெண் அபிநயா
சித்திரை மாதத்தில் ஆயா வீட்டிலிருக்கையில் வயதுக்கு வந்துவிட
அந்த ஒன்பது நாட்களும் வீடு பலகாரத்திலும் அலங்காரத்திலும் தூள்
கிளப்பியது.  நானும் மற்ற இரண்டு சித்தி பெண்களும் அங்கலாய்த்துக்
கொண்டோம்.  “அய்யோ, நாம் ஏன் நம்மூரில் வயதுக்கு வந்து
தொலைத்தோம்.  லீவுக்கு வரும்போது வந்திருக்கக் கூடாதா என்று”. 
ஆயா வாய்விட்டு சிரித்த தருணங்கள் அவை.

ஆனால், அவள் உள்ளுக்குள்ளேயே மருகி கண்களை கசக்கும்
சம்பவம் எப்போதும் தாத்தாவால் நிகழும்.  ஆண்பிள்ளை பெற்றுக்
கொடுக்கவில்லை என்பதில் ஆரம்பித்து முகரக்கட்டை லட்சணம்
சரியில்லை என்பதுவரை வாய் ஓயாமல் நாளெல்லாம் திட்டிக்
கொண்டிருப்பதுதான் தாத்தாவின் வாழ்க்கை.  போதாக்குறைக்கு
மொடாக் குடியுடன்தான் எப்போதும் மிதப்பார்.  போளூர்,
முள்ளண்டிரம் என இருவேறு இடங்களில் சின்ன வீடுகள் என
ஊர்மக்கள் பேசிக் கொள்வதுண்டு.  அத்தனையும் ஆயா அறிந்ததுதான்.

ஆயிற்று.  ஆயா வீட்டிற்கு சென்றே வருடங்கள் பல
உருண்டோடிவிட்டது.  முழுதாய் ஐந்து காலண்டர் காகிதங்கள்
கரைந்ததாய் ஞாபகம்.  தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில்
இருந்தாலும் ஸ்பரிச உணர்வுக்கு ஈடு இணை ஏது?  இதோ தாத்தா
இறப்பின் பொருட்டு அவரின் 15ம் நாள் கடைசி காரியத்திற்காக
செல்லக்கூடிய சூழ்நிலை.

‘சேவூரெல்லாம் இறங்குங்க’ என்று ஏழு கட்டையில் கத்தினார்
நடத்துனர்.  தூங்கிக் கொண்டிருந்த விக்ராந்த்தை தோளில் போட்டபடி
இறங்கினேன்.  தெரு நெடுகிலும் என்னைக் குறித்தான நலம்
விசாரிப்புகளுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

ஆயாவுக்கு நெற்றியில் ஒரு ரூபாய் அளவு பெரிய பொட்டு
வைத்து அந்த சிறிய கொண்டைக்கு தலை கொள்ளாத பூ
சொருகியிருந்தனர்.  சிவப்பு காடா புடவை வெள்ளை ரவிக்கை
என சடங்கு போர்வை அவர் மேல் போர்த்தப்பட்டிருந்தது.

தோல் சுருங்கிப் போன அவரின் கை தொட்டபோது
ஏற்பட்ட உஷ்ணம் என் உடம்பெங்கும் பரவியது.  ஷேமலாப
விசாரிப்புக்கு அங்கே அவசியமில்லாமல் போனது.

இரண்டு வருடங்களாக தாத்தா படுத்த படுக்கையாய் இருந்து
ஆயாவிற்கு பெரும் பாரம் கொடுத்து விட்டிருந்தார் என்று பேசிக்
கொண்டனர்.  நேரம் நெருங்க படையல் முடிக்கப்பட்டது.  கோடி
போடுதலுக்கு ஆளாள் கொண்டு வந்த புடவையை வாங்கி
பார்த்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்.

விடியற்காலை வரை மணிக்கொருதரம் தாத்தா படம் முன்
கற்பூரம் ஏற்ற வைத்து அழ வைத்து தூங்கி விடாதபடி அலைக்கழித்தது
சடங்கு சம்பிரதாயம் என வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்த ஊர்
பெருசுகள்.  படித்த படிப்பும் எடுத்த டிகிரியும் பயனற்று போனது அங்கே.

‘முக்காடு கோடி’ போடுதலில் கடைசி நிகழ்வாக
‘சுமங்கலிங்க கடைசியா அவர் கையால குங்குமம் வாங்கி
நெத்தில வெச்சுங்க, ஆனா தாலில வெக்கக் கூடாது’ என
கூவியபடி இருந்தார் கோடிக்காரர்.  பின் உள்ளே அழைத்துச்
செல்லப்பட்டார்.  ஓர்; அமானுஷ்ய மௌனம்.  தாலியும் மெட்டியும்
அகற்றப்பட்டு கண்ணாடி வளையல்கள் உடைக்கப்பட்டு பூவும்
பொட்டுமற்ற ஆயாவாக திரும்பி வந்தார்.  அம்மாவும் சித்திகளும்
கதறி கதறி அழுதனர்.  ஆனால், ஆயாவின் முகம் முன்னைக்
காட்டிலும் பிரகாசமாய், நிம்மதியாய் மாறியதாக பட்டது எனக்கு.


 நன்றி : கல்கி

                             

3 comments:

  1. As usual.. Sad story..But good words.. Last line la atho grandma ku nimathi nu finish pannathu nice..

    Good Story narration..

    ReplyDelete
  2. கல்கியில் படித்தபோதே வெகுவாய் ரசித்தேன்.
    கட்டிக் கொடுத்த பெண்களை சமையலறைக்குள் அனுமதியாமல்
    உட்கார்த்தி வைத்து மொத்த சமையலையும் ஒத்தை ஆளாய் நின்று
    செய்துவிடும் சாமர்த்தியம் ஆயாவிடம் இருந்தது.
    ஆயாவுடன் அவர் வீட்டுப் பிள்ளையாய் வாழ்ந்த உணர்வு வருகிறது வாசித்து முடிக்கும்போது.

    ReplyDelete
  3. பவித்ரா நந்தகுமார்
    உங்கள் பதிவு அருமை கல்கி புத்தகம் வாங்க வேண்டாம் உங்கள் பதிவே போதும் சிறுகதை படிக்க
    facebook உங்கள் பதிவை பதிவு செய்யலாமே
    www.facebook.com

    ReplyDelete