Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Thursday, December 16, 2010

தங்கத்தோடு

 மட்டற்ற மகிழ்ச்சி மலையம்மாளுக்கு, கைகளால்
தடவிக் கொடுத்து கண்குளிர ஆசையாய் அந்த தோடையே
பார்த்துக் கொண்டிருந்தாள்.

எலே போதுமடி பார்த்தது. காதுல மாட்டி பாருடி...
ஏன் ஆத்தா? நீ தானே சொல்லுவ, உனக்குத் தங்கத்தோடு
ராசியில்லை தங்கத்தோடு ராசியில்லைன்னு... இப்படியே
சொல்லி இவ்வளவு வயசுல ஒத்த தோட நீ வாங்கிக்
கொடுக்க லயே.. இன்னிக்கு கரி நாள் நாளைக்குத் தான்
நல்ல நேரத்துல போட்டு பார்க்கணும்.

”அடி பாவி மகளே” ராகத்துடன் இழுத்தவள், நான்
என்ன போடாமலா கிடந்தேன். அதுவும் நீ எனக்கு ஒத்த
பொட்டப்புள்ள. காது குத்தையில எங்காத்தா 2 கல்லு
வெச்சு மீன் தோட்டை வச்சிச்சி. அதப் போட்டநாலுல
இருந்து புண்ணா புடிச்சி. சீப் போன்னு விட்டுப்புட்டேன்.
ஹூம்... நீ சமைஞ்சதும் உன் தாய் மாமன் லட்சணமா
மூணு இலை ஒட்டினாப்புல தோட்டை வாங்கி வெச்சான்.
பள்ளிக் கூடத்துக்கு போட்டுன்னு போயி யாரோ துரத்துறான்னு
அலறின்னு வந்தே, மறுபடியும் கழட்டிட்டேன். வெவரம்
தெரிஞ்சதும் போட்டா இரண்டே நாள்ல தொலைச்சுட்டும்
வந்துட்டே..”

’உங்கய்யன் போய் சேர்ந்ததுக்கப்புறம் ஒண்ணு
ஒண்ணா எல்லா நகையும் அடகு கடையில குடி போயிடுச்சி..
மூணு ஜத மூக்குத்தியோட கட்டிக் கொடுத்தேன். அந்த
பாவிப் பய...

”ஆத்தா இப்ப எதுக்கு அதெல்லாம்?”

என் மனசு கேக்கலயே.. படுபாவி.. உன் தங்ககுணத்தப்
பார்க்காம தங்கம் இல்லேன்னு இன்னொரு கல்யாணம் கட்டிக்கினு
வாயும் வயிறுமா இருக்கப்ப வுட்டுட்டு போயிட்டானே...

ஏ! ஆத்தா எத்தனை தடவ சொல்றது என் புள்ள எதிருல
அந்த மனுசன பத்தி பேசாதேன்னு.நீ வாடா ராசா...
”அம்மா, இந்த தோடு யாருக்குமா?”

”எனக்குத் தான் ராசா வாங்கியிருக்கேன். சின்னப்
புள்ளையிலருந்து எனக்கு தங்கத்தோடுன்னா கொள்ளை பிரியம்.
எதுவுமே தங்கல.ஆண்டவன் புண்ணியத்துல அம்மாவே உழைச்சி
சீட்டு சேர்த்து முக்காக் பவுனுல துணிஞ்சி வாங்கிடடேன்
கண்ணு...”

”இத நீ தினமும் போட்டுக்குவியாம்மா...?”
நாளைக்கு மதியம் நல்ல நேரத்துல இந்த தோட்டை
போட்டுக்குவோம். சரியா? இப்ப நம்ம சாப்பிடலாமா...?

கருமேகங்கள் ஊரை வளைத்தாற் போல் சூழ்ந்துக் கொண்டது.
அங்கொன்றும், இங்கொன்றுமாக வானம் தூறலாய் தண்ணீர்
தெளித்துக் கொண்டிருந்தது.

என்ன ஆத்தாளும் மவளும் இம்புட்டு நேரங்கழிச்சி வர்றீங்க?
எப்ப வேலை ஆவுறது?

ஐயா என் மவனுக்கு காய்ச்சல். கஞ்சி காய்ச்சி வச்சிட்டு,
ஆஸ்பத்திரி வரைக்கும் போயிட்டு வந்தேன். அதான்
நேரம் ஆயிடிச்சி...

சரி... சரி... சீக்கரம் வேலைய ஆரம்பியுங்க.
வானம் வேற வேலையை காண்பிக்குது. ஆளுக்கு ஓரு சுத்திய்
எடுத்து செங்கல்லை துண்டு துண்டாக உடைக்க ஆரம்பித்தார்கள்.
எங்கிருந்தோ வந்த அந்தக் குரல் அனைவரின் ஈரக்குலையையும்
நடுநடுங்க வைத்தது.

எலே... சிறுவாத்து ஏரி ரொம்பி உடைப்பெடுத்து நம்ம
கிராமத்துக்குள்ளாற தண்ணி வருதுல. மேடான எடத்து மேல
ஏறி பொழச்சிக்குங்க... போங்க... சீக்கரம் போங்க...

தேனி கொட்டி விட்டது போல் அலறி ஓட்டமெடுத்தது
பெருங்கூட்டம். அய்யோ... அம்மான்னு வாயிலும்,
வயிற்றிலும் அடித்துக் கொண்டு வீடு நோக்கி ஓடியது பெண்கள்
கூட்டம்.யாருப்பா பாத்தது... எங்கிட்டு வருதுன்னு கேள்வி
கேட்டு துளைக்குது இன்னொரு கூட்டம். துணிமணி போனா
போகுது... உசுரு போச்சுனான்னு கேள்வியோட ஐந்தாறு
பெருசுங்க தண்டவாள மேட்டை நோக்கி ஓடுதுங்க...

அய்யோ... என் ராசா, காய்ச்சல்னு உன்ன வூட்ல படுக்க
வெச்சிட்டு வந்தேனே... உனக்கு என்ன ஆச்சோன்னு
வாரியடித்துக் கொண்டு ஓடினா மலையம்மா...

சீக்கரம் போய் ராசாவ கூட்டியாடி... ஓடு... அந்த புள்ள
என்ன பண்ணுதோ... தெரியலியே... மாரிலடித்தவாறு
ஒப்பாரி வைத்து மடங்கி உட்காந்தா ஆத்தாக்காரி.

குடிசைக்குள்ள தண்ணி போறத தூரமே பார்த்துட்ட
மலையம்மா, காத்தா மாறி வந்தா, நெஞ்சுக்கூடு பக்...
பக்னு அடிச்சிக்க சலக் சலக்னு தண்ணிக்குள்ள காலை வச்சி
முன்னேறி, மகமாயித் தாயே, ராசாவக் காபாத்துன்னு
முணுமுணுக்குது உதடு. முட்டிக்கால் புடவை நனைய
குடிசைக்குள்ள நுழைஞ்சா ராசாவ காணல...

” ராசா... ராசா... என் கண்ணு” வெள்ளத்தோடு
போட்டி போட்டு வேகமாக கொட்டுது கண்ணீர்.

அம்மா... நான் இங்கிருக்கேன். சத்தம் கேட்டு ஓடி,
சமையலறை திண்ணை மீது ஏறி நின்றிருந்தவனை மாறி,
மாறி முத்தமிட்டாள். எங்கண்ணு வாடா போயிரலாம்.
பிள்ளையை தூக்கிக்கொண்டு வேக, வேகமா, பாதி தூரம்
நடந்து வந்த மலையம்மாளுக்கு, இப்பதான் ஞாபகம் வந்தது
அந்தத் தங்கத்தோடு...

அய்யய்யோ, மேல் அலமாரியில நேத்து வச்சமே...
வெள்ளம் வர்ற வேகத்துல அடிச்சினு போயிடுமே... நான்
என்ன செய்வேன். கொஞ்ச முன்ன ஞாபகம் வரலியே இந்த
சிறுக்கிக்கு.

அந்த பக்கம் ஓடின மணியை மடக்கி,மணியண்ணே...
தண்டவாள மேட்டாண்ட எங்காத்தாக்கிட்ட ராசாவ
ஒப்படைச்சிடுங்கண்ணே...

நீ எங்க தாயி போற?

தோ... வீட்டாண்ட வர போயிட்டு வந்துடுறேண்ணே.
அந்த பக்கம் இடுப்பு வர வெள்ளம் வந்துருச்சும்மா,
எங்கபோகக் போற?

இதோ... வந்துடுவேண்ணே...

அம்மா... சீக்கரம் வந்துடும்மா... கையைப் பிடித்து
இழுத்தான் ராசா.

வந்துடுறேன் கண்ணு. நீ ஜாக்கிரதையா போ செல்லம்.
இடுப்பு வரை வந்துவிட்ட தண்ணீரில் தத்தளித்து குடிசையை
அடைந்து, கையில் தோடு அடங்கிய அந்த சிறு பெட்டியை
ஏந்தி, தட்டுத்தடுமாறி விரைந்தாள். மொத்த கூட்டமும்
மேட்டுக்கு ஓடி விட ஒத்த பொம்பளையாய் துணியை
ஒண்டியபடியே நடந்தாள்.

எங்கிருந்து தான் வெள்ளம் வந்ததோ அப்படியொரு வெள்ளம்.
சிறுவாத்து ஏரியின் மற்றொருபுறம் உடைப்பெடுக்க பெரும்
சத்தத்தோடு வெள்ளம் சீறிப் பாய்ந்தது. சத்தம் கேட்டு
திரும்பியவள், வெள்ளத்தைப் பார்த்து அலறி ஆத்தா என
கூவியபடி நிலை தடுமாறினாள். தன் அகோரப் பசிக்கு செந்நிற
நாக்கை நீட்டி மலையம்மாளை சுருட்டிக் கொண்டது வெள்ளம்.

ஒதுங்கிய மலையம்மாவின் சடலத்தின் கைகளில் அந்த சிறிய
தங்கத்தோடு பெட்டியை கண்டு ஆற்றாமல் வயிற்றிலும்,
வாயிலும், அடித்து அரற்றினாள் ஆத்தாக்காரி.

இப்பவும் அந்த தோடு உனக்கு ராசியில்லாமலேயே
போயிடுச்சேடி பாவி மகளே... தோடு தோடுன்னு உசுற
வெச்சு இன்னிக்கு உன் உசுரயே கொடுத்துட்டு நிக்குறியே...
இந்தப் பச்சபுள்ளைக்கு நான் என்னா பதில் சொல்லுவேன்.
ஊரே வாய் பொத்தி, கசிந்துக் கொண்டிருக்க, வெறித்து
பார்த்துக் கொண்டிருந்த ராசா, மலையம்மாளின் உயிரற்ற
காதுக்கு அந்த தங்கத் தோடை மாட்டிவிட்டான்.

அம்மா,சீக்கரம் வந்துடவேன் செல்லம்னு சொன்னியேம்மா,
எப்பம்மா வருவே, வாம்மா என கண்களில் பயம் விலகாமல்
மலையம்மாளின் சடலத்தை பிடித்து இழுத்துக் கொண்டுருந்தான்.

எத்தனையோ கனவுகளுடன் இருந்த உயிர்களை காவு
வாங்கியும் தீராமல் வெள்ளம் உருண்டு, புரண்டு
ஓடிக்கொண்டு தான் இருந்தது.


நன்றி :தினமலர் -வாரமலர்

1 comment: