Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Wednesday, December 15, 2010

புத்திர சோகம்



விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது.சூரியன்
மெல்ல தன் தலையைக் காட்டி உலகை எட்டிப் பார்க்கும்
நேரம். வயக்காட்டில் பம்புசெட்டுப் போட்டு நீர் பாய்ச்சினார்
பெரியவர் சுந்தரலிங்கம். கெட்டியான இருட்டு கரைந்து மனித
தலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்தன.
வேட்டியை மடித்து தோளிலிருந்த துண்டை உதறி முண்டாசு
கட்டிக்கொண்டு மண்வெட்டி சகிதம் வரப்பில் இறங்கி சரிந்திருந்த
மண்ணை சமன்படுத்தினார்.

“என்னங்க அப்பு, நாங்க செய்ய மாட்டோமா? நீங்க எதுக்கு
இறங்குறீங்க?” பதறி வந்து வாங்கினான் மாடசாமி.

“என்னடா, இந்நேரம் வரீங்க.. இன்னிக்கு நடவு இருக்குனு
நேத்தே சொல்லி வச்சேன். ஒரு பயலும் ஆளைக் காணோம்?”

“தோ, வந்துட்டிருக்காங்கய்யா..”

“சீக்கிரம் எல்லாரும் கட்டை எடுங்க. நல்ல நேரம் ஓடுது.
முதல்ல நானே ஆரம்பிக்குறேன்.. தாயே மகமாயி, மண்ணுல
போட்டத பொன்னா ஆக்கி குடும்மா.. எந்தாயே!”
ஆத்மார்த்தமாக வேண்டி நாற்று நடத் தொடங்கினார்.

“நீங்க உட்காருங்கய்யா, நாங்க செய்யுறோம்.”

“முதலாளிதாண்டா முதல் தொழிலாளியா இருந்து வேலை
செய்யணும்.. ம்.. ஆனா, இப்ப என் மனசு நெனச்சாலும்
உடம்பு கேக்க மாட்டேங்குது. 75 வயசு ஆயிடுச்சில்ல”
கலகலவென சிரித்தார் சுந்தரலிங்கம்.

சுந்தரலிங்கம் சற்றே கருத்த தேகம்.நல்ல திடகாத்திரமான
உடல். வெள்ளி சரிகையென நரை விழுந்த சுருண்ட முடி,
வளர்ந்து கெட்டான் என அழைக்கப்படும் உயரம், மூக்குக்குக்
கீழே அடர்ந்த மீசை. மீசையை அவ்வப்போது முறுக்கிக்
கொள்வதில் அவருக்கு அப்படியொரு சுகம். இந்த வயதிலும்
கண்ணாடி, கைத்தடி என்றில்லாமல் சிறுவனைப் போல வலம்
வருபவர்.

“மடமடனு வேலய முடிங்க. தோ, முக்கிய சோலியா
வீடு வர போயிட்டு வரேன். எலே மாடசாமி..கவனிச்சுக்கடா!”

இரு கைகளையும் கக்கத்தில் சொருகியபடியே “சரிங்கய்யா”
என்றான் மாடசாமி.

சுந்தரலிங்கத்துக்கு இரு மகன்கள் இருந்தும் யாரும்
வயக்காட்டை கவனிக்கவில்லை. படித்து, பக்கத்தில் உள்ள
நகரத்தில் வேலைக்கு சேந்து குடியேறியும் விட்டனர்.
‘நான் செத்தாலும் என் மண்ணோடுதான் சாவேன்’ என
மனைவியுடன் பிடிவாதமாக இங்கேயே இருந்து விட்டார் அவர்.

“மரகதம்.. மரகதம்..”

“ஆங்.. வந்துட்டேங்க”

“நம்ம சிவராஜ் வீட்டுக் கல்யாணத்துக்குப் போகணும்னு
வேட்டி சட்டையை எடுத்து வைக்கச் சொன்னேனே..வச்சியா?”

“ம்.. கடையில கொடுத்து பொட்டி போட்டு வச்சிருக்கேன்.
ஆமா, யார் கல்யாணம்னாலும் இங்கிட்டு வேல இருக்கு..
அங்கிட்டு வேல கிடக்குனு என்னையத்தான் அனுப்புவீங்க.
ரெண்டு நாளா இந்த கல்யாணத்துக்குப் போகணும்னு இப்படி
ஆளாப்பறக்குறீங்களே, என்னமுங்க விஷயம்..? அதுவும்
இன்னிக்கு நடவக் கூட வுட்டுப்புட்டு..”

“அடியே,சிவராஜ் என் பால்ய கால சிநேகிதன்.பெரிய இடம்.
நம்ம மதிச்சி பத்திரிகை வச்சிருக்கான். அதுக்கும் மேல,
‘அடேய், உன் மண்ணுல வௌயுற அரிசியக் காட்டிலும்
ருசியா இந்தூருல எங்கடா இருக்கு அரிசி’னு நம்ம நெல்ல
வாங்கி அவனே தொட்டி போட்டு அரிசியாக்கி பக்கத்து ஊரே
இன்னிக்கு நம்ம மண்ணுல விளைஞ்ச அரிசியத்தான் சாப்பிடப்
போகுது. அத விட வேற என்ன புள்ள சந்தோஷம் வேண்டிக்
கிடக்கு? சாரி, நான் வரேன் புள்ள. நேரமாச்சி இன்னும்
வண்டியப் புடிச்சி போவணும்.”

பேருந்தை விட்டு இறங்கியதுமே வலதுபுறம் அந்த
பிரம்மாண்ட திருமண மண்டபம் கண்ணுக்கு எட்டியது.
அரங்கினுள் நுழையும்போதே விஸ்தாரமான நீர் வீழ்ச்சியில்
சர்ரென நீண்டு விர்ரென கீழே விழுந்தன நீர்த்துளிகள்.
மலர்க் கண்காட்சியோ என வியக்கும் வகையில் அடுக்கடுக்காய்
பூத்துக் குலுங்கும் பலவிதமான மலர்கள் தொட்டிகளில்
பார்வைக்காக.

மிக்கி மௌசும், டொனால்ட் டக் பொம்மையும் வரும்
குழந்தைகளின் கைகளை பிடித்துக் குலுக்கத் தவறவில்லை.
பல வாண்டுகள் அங்கேயே சுற்றி நின்று கொண்டும் சில
குழந்தைகள் ‘வீர்’என பயந்து நடுங்கியும் ஓட்டம் பிடித்தனர்.

சுந்தரலிங்கத்துக்கும் உள்ளூற ஆசை.. அதன் கைகளை
பற்றி,குலுக்க வேண்டுமென்று.ஆனாலும் ஒரு சின்ன தயக்கம்.
பக்கவாட்டில் சென்று கையை நீட்டினார். குனிந்திருந்த
அந்த பொம்மை நிமிர்ந்து குலுக்கோ குலுக்கு என குலுக்கியது.
வாண்டுகளெல்லாம் குதூகலிக்க இவரும் வாய் கொள்ளாமல்
ஒரு குழந்தையைப் போல சிரித்து மகிழ்ந்தார். ‘நம்ம பேரப்
பசங்களையும் கூட்டி வந்திருந்தா இதையெல்லாம் பார்த்திருப்
பார்களே!’என மனதின் ஒரு ஓரத்தில் அடித்துக் கொண்டது.

வாசலிலேயே நின்றிருந்த சிவராஜ், இவரைக் கண்டதும்,
“டேய் சுந்தரலிங்கம், வா வா வா.. நேத்தே வருவேனு
பாத்தேன்” என்றார்.

“ஏகப்பட்ட சோலிடா,அதான் முகூர்த்தத்துக்கு
வந்துட்டேனில்ல.”

“சரி சரி, போய் உட்காருடா.”

தலையாட்டும் மொட்டை செட்டியார் பொம்மை பன்னீரைச்
சிந்தியவாறே சிரித்துக் கொண்டிருந்தார். வானத்து
தேவதைகள் மண்ணில் இறங்கி வந்து விட்டார்களோ என
எண்ணுமளவு பட்டுப் புடவையில் பெண்கள் அலங்காரமாய்க்
காட்சியளித்தனர். குட்டி தேவதைகள் பன்னீர் தூவி
வரவேற்றனர். கற்கண்டை சுவைத்தபடியே இருக்கையில்
வந்தமர்ந்தார் சுந்தரலிங்கம்.

மேடையில் அழகிய மலர் ஜோடனை. வழியெங்கும்
கார்ப்பெட் விரிப்பு கண்ணைக் கவர்ந்தது. அலங்கார
விளக்குகளின் ஒளியில் மண்டபமே நனைந்து கொண்டிருந்தது.

சத்தியமாய், அவர் வயதுக்கு இத்தனை பிரம்மாண்டமான
திருமணத்துக்கு வந்ததே இல்லை. தன் இரு மகன்களுக்கும்
மருமகள்களின் வீடுகளிலேயே திருமணம் நடந்தது.. அதுவும்
மிக எளிமையாக! இனி இதுபோன்ற திருமண வைபவங்களில்
நிறைய கலந்து கொள்ள வேண்டும் என்று மனதில் அசை
போட்டுக் கொண்டார். இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு தன்
வீட்டு அரிசியை வாங்கிப் போனதை ஒவ்வொரு தருணமும்
நினைத்து நினைத்து மிகவும் பூரித்துப் போனார்.

மண்டபம் கொள்ளாத கூட்டம்.கெட்டி மேளம் கொட்டியது.
அரிசி மழையில் மணமக்கள் நனைந்தனர். திரையரங்கில்
சுபம் போட்டதும் குபீரென எழும் மக்களைப் போல தாலி
கட்டியதுதான் தாமதம்.. எல்லோரும் பந்திக்கு முந்தத்
தொடங்கினர். சுந்தரலிங்கமும் எழுந்தார். சிறு சிறு
அடி எடுத்து வேகமாக முன்னேறினார். ஏற்கனவே இலை
போட்டு நெய் மைசூர்பா, லட்டு, முந்திரி கேக் என
மூவகை இனிப்புகள், காய்கறி,கூட்டு, பக்கோடா,அவியல்,
பொறியல் வகை வகையாக பரிமாறப்பட்டிருந்தது.
சுந்தரலிங்கம் இருக்கையில் இடம் கிடைத்து அமர்ந்தார்.
இடம் கிடைக்காமல் பலர் ஓரமாக ஒரு மூலையில் ஒதுங்கி
நின்றனர்.

எறும்பைப் போல் வரிசையாய் வந்த சப்ளையர்கள்
பரிமாறி விட்டு மின்னலென மறைந்தார்கள். சுடச்சுட
சாதம் வந்தது. வெந்த சாதத்தின் வாசனையே அலாதி
அவருக்கு. ஒரு சொம்பு தண்ணீரோடு காலையிலிருந்து
அலைந்தவர், ஆனந்தமாய் அந்தக் கல்யாண விருந்தை
ஒரு பிடி பிடித்தார். இலையில் பாதி வயிற்றுக்குள் சென்ற
பிறகு, அக்கம் பக்கம் பார்வையை சுழற்றினார்.

குழம்பு ஊற்றிய சாதத்தை அப்படியே ஒதுக்கி ரசத்தை
வாங்கினார் ஒருவர். அதையும் பாதியிலேயே ஒதுக்கி
மோரை வாங்கினார். அதையும் முழுமையாக சாப்பிடாமல்
அப்படியே மடித்தார். அதிர்ந்தார் சுந்தரலிங்கம்.

பக்கத்தில் இருந்தவா; ஒரு இனிப்பைக் கூடத் தொட
வில்லை.பாதி இலை நிரம்பியிருக்க அப்படியே மடித்தார்.
அவருக்கு மனம் பதை பதைத்தது. கேட்டுவிட்டார்.

“என்னய்யா,இலைல பாதிய அப்படியே மடிச்சுட்டீங்களே..?”

“சார், எனக்கு சர்க்கரை வியாதி. இனிப்பு என் நாக்குல
பட்டாலே சுகர் ஏறிடும். தவிர, எண்ணெய் எனக்கு ஆவாது.
நீங்க கொடுத்து வச்சவர் சார்.நல்லா வெளுத்துக் கட்டுறீங்க.”

இந்தப் புறம் திரும்பினார்.‘இது வேண்டும் அது வேண்டும்’
என கேட்டுக் கேட்டு வாங்கி மொத்தத்தையும் அப்படியே
மூடினார் ஒருவர் கோபம் தலைக்கேறியது சுந்தரலிங்கத்துக்கு.

“எல்லாத்தையும் கேட்டு வாங்கி அநியாயமாய் அப்படியே
மடிச்சிட்டீங்களே”

“நான் மாப்பிள்ளை வீட்டுக்காரன்யா.. நம்ம கூப்பிட்ட
குரலுக்கு ஓடி வந்து கவனிக்குறாங்களான்னு பார்த்தேன்.
நல்லாவே கவனிக்குறாங்க.”

தலை சுற்றியது அவருக்கு. மீதம் இருந்தவற்றை
சாப்பிடவே உணர்வற்றுக் கிடந்தார்.

“எல்லோரும் எழுந்துட்டாங்க, பெரியவரே.. சீக்கிரம்
சாப்பிடுங்க, அடுத்த பந்திக்கு ஆளுங்க நிக்குறாங்க” என்ற
குரலைக் கேட்டு லபக் லபக்கென இலையில் இருந்தவற்றை
உருட்டித் தள்ளினார்.

கை கழுவி திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் இலையி
லேயே பாதியை வைத்து மூடினர்.ஆடம்பரத்தையும் பிரம்
மாண்டத்தையும் பார்த்து ரசித்த அவர் கண்கள், இந்தக்
காட்சிகளைக் கண்டு கதறியது, செய்வதறியாது திகைத்தது.

தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞன்
ஒருவன் பரிமாறும் பணியாட்களை கை சொடுக்கு போட்டு
அழைத்த வண்ணம் இருந்தான். கூர் மையாக ஊடுருவியவர்,
மீண்டும் முகத்தைத் தொங்கப் போட்டார். இம்முறையும்
விடாமல் வினவியதற்கு, நிமிர்ந்து கண்ணாடியை சரி
செய்தவண்ணம் மேலும் கீழும் இவரை “என்னென்ன
ஐட்டம் மொத்தம் போட்டாங்கன்னு தெரிஞ்சுக்க வேணாமா
பெரியவரே?” என்றான்.

“தெரிஞ்சும் உங்களால சாப்பிட முடியலையே. ஒரு
மழைக் காகிதத்துல வச்சி வீட்டுக்கு எடுத்துப் போனாலும்
புள்ளைங்க சாப்பிடுமே..”

“சரியாப் போச்சு.யார் பெரியவரே அசிங்கமா தூக்கிட்டுப்
போறது? மூடி வச்சா முடிஞ்சு போச்சு!”

உண்மையிலேயே நிலைகுலைந்து போனார் சுந்தரலிங்கம்.
‘மண்ணில் ஒரு அரிசியை எடுக்க எவ்வளவு வியர்வை சிந்தி,
மழையுடன் போராடி எத்தனை மாதம் காத்திருந்து உழைக்கிறோம்.
பத்து மாசம் சுமந்து பெத்த புள்ளைய ஆசையா பாக்குற
ஆத்தாளாட்டம், ஒவ்வொரு அறுவடையிலயும் நான் புள்ளையா
என் நெல்லு மூட்டைகளை பாத்தேனே.ஒவ்வொருகுண்டுமணி
நெல்லா நான் சேகரிச்சது இங்கே சகதியில் வீணாகுதே.
கடவுளே.. இதப் பாக்கத்தான் இங்க வந்தேனா?

அவனவன் கண்ணால பாக்குறதத் தாண்டி வயித்துக்குள்ள
கூட தள்ளல. நம்ம ஆளுங்க ஒரு பருக்கை விடாம வழிச்சி
சாப்பிடுவானுங்க. அவங்க எங்க, இவங்க எங்க! கவுரவத்த
பாக்குறதுக்கும் கவனிக்குறாங்களானு பாக்குறதுக்கும் உணவுப்
பொருள் அவ்வளவு இளக்காரமா? உழைச்சவனுக்குத் தானே
அந்த உணர்வு புரியும். இலையோட கீழ போனதே இன்னொரு
பந்தி பரிமாறலாம் போலிருக்கே!’ என எக்கச்சக்க மனப்
போராட்டங்கள் அவருக்குள்.

ஒரு அரிசிப் பருக்கை கீழே சிந்தினால், அதைஊசியால்
குத்தி, தண்ணீரில் நனைத்து, மீண்டும் இலைக்குள்
இடுவாராம் வள்ளுவர். நான்காம் வகுப்பு ஆசிரியர்
நடத்தியது பசுமரத்தாணி போல மனதில் படிந்து போயிருந்தது
அவருக்கு. ஏறத்தாழ அவ்வாறே வாழ பழக்கப்பட்டவர்.

மண்டபத்துக்கு வெளியே வந்தார். உள்ளே நுழைகையில்
மனதும் வயிறும் காலியாக இருந்தது. இப்போதோ வயிறு
சாப்பாட்டையும் மனது சங்கடத்தையும் சம்பாதித்திருந்தது.

“என்னடா சுந்தரலிங்கம்..சாப்பிட்டியா? சமையலெல்லாம்
எப்படி இருந்தது” வாசலில் நின்ற சிவராஜ் கேட்கக் கேட்க
கவனியாது, புத்திரசோகத்தோடு வெளியேறினார் சுந்தரலிங்கம்.


நன்றி-தேவதை

No comments:

Post a Comment