Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Wednesday, December 15, 2010

அத்தை


மழை அடர்வாக வலுப்பதும், தூறலாய்ச் சிறுப்பதுமாய்க்
கண்கட்டுவித்தை காட்டிக் கொண்டிருந்தது.செம்மணிட்ட கோலம்
உடனே கலைவதைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்
சியாமளா.தொலைபேசி அலறி உள்ளே அழைத்தது.

கேட்டது தான் தாமதம்.அவளின் தினசரி வேலைகள் செயலிழந்து
போயின.அவளைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்த அத்தை ஊரில்
உணர்வற்று இழுத்துக் கொண்டிருக்கிறாள் என்று வந்தது சேதி.உடனே
கிளம்பலாம் என்றால் இதோ நவராத்திரியின் பொருட்டுக் கலசம் நிறுத்த
வேண்டிய முக்கிய நாள்.அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த ராமிடம்
விஷயத்தை அடிக்கோடிட்டாள்.

“என்ன இழுத்துண்டிருக்காளா?”
“ம்… கண்டிப்பா போய்ப் பார்க்கணும்”.

“என்ன விளையாடுறியா… ஏற்கெனவே நிறைய லீவு வேற
எடுத்துட்டேன். இனிமேல் எடுத்தேன்னா எம்.டி. என்னைக் கூப்பிட்டு
வார்ன் பண்ற நிலைமைதான் வரும்”.

“சரிங்க, நான் தனியாவே போய்க்குறேன்”.

“சியாமு, அது ஒண்ணும் தமிழ்நாடு இல்லை, ஹைதராபாத்.பாஷை
தெரியாத ஊர்ல தனியாப் போய் என்ன பண்ணுவ நீ? பரத்துக்கும்
வைஸுக்கும் காலாண்டுப் பரீட்டை வேற. ஞாபகம் வெச்சுக்கோ.
அவங்கென்ன அம்மாவா…அத்தைதானே?”

எவ்வளவு சாதாரணமாய் வந்துவிட்டது அவரிடம் இருந்து வார்த்தைகள்.
பாசம் காண்பிப்பதில் பாகுபாடு காட்டி உறவின்பால் பிரித்துப் பேசும்
கணவனை என்னவென்று சொல்வது?

மழை வலுத்த நேரம் மீண்டும் தொடர்ந்தாள்.

“பிராக்டிகலா பாரும்மா. ஒரேயடியா ‘டெத்’துக்கு போகலாம் விடு”.

“போதும் நிறுத்துங்க.உயிரோட இருக்கறவங்கள நீங்களே கொன்னுடாதீங்க”.

“எதுக்கிப்ப கண்கலங்கற… எங்கம்மா பர்மிஷன் கொடுத்துட்டா நீ
தாராளமா போயிட்டு வா. வர்றேன்”.

கோயிலுக்குச் சென்றிருந்த மாமியார் மீனாட்சியின் வருகைக்காகக்
காத்திருந்தாள். மாமி மனமிறங்கிவிட்டால் உடனே கிளம்பலாமே என்று
வேலைகளை மட மடவென முடித்துக் கொண்டிருந்தாள்.

அன்று புரட்டாசி மாத அமாவாசை. கொலு வைக்கும் பழக்கம் உள்ள
குடும்பம்.இருபதுக்குப் பன்னிரெண்டான வீட்டுக் கூடத்தினுள் ஒன்பது படிகள்
நிறுத்தி வெள்ளை வேட்டி நிரவினாள்.

வழக்கமாய்க் கையிலெடுக்கும் பொம்மைகளின் கூரிய முகம்,
பேசும் கண்கள், அமைப்பான முகம், தவறாது சிவப்புச் சாயம் பூசிய
உதடுகள், சுவாமி பொம்மைகளிலுள்ள நகைகள் இவற்றின் அழகைப்
பார்த்து வியந்தவண்ணம் துடைத்துத் துடைத்து அடுக்கி வைப்பாள்.ஆனால்,
இவ்வருடம் அவளுக்குத் தவிப்பாய்ப் போயிற்று.

பொம்மைகள் வரிசையாக அடுக்கப்பட்டு படிக்கு படி கீழிறங்க
அத்தையின் ஞாபகங்கள் மன அடுக்கில் மேலெழும்பிக் கொண்டிருந்தன.

திருமணமாகாமல் முதிர் கன்னியாய் சில காலம் இருந்த அத்தையிடம்
நீண்டநாள் உறவு கொண்டாட முடிந்தது இவளுக்கு. அத்தைக்கு இடுப்பைத்
தாண்டிய நீள முடி.முன்பக்கப் பற்கள் துருத்திக் கொண்டிருப்பதால்தான்
திருமணம் தள்ளிப்போனது என்று பாட்டி கூறுவாள்.

எத்தனை அழகாய் பல்லாங்குழி ஆடச் சொல்லிக் கொடுத்தாள்.நான்
தோற்கக்கூடாது என்பதற்காக எத்தனை தரம் தான் தோற்றிருக்கிறாள்?
பங்க் கடையில் பன்னீர் சோடா வாங்கிக் கொடுப்பதிலாகட்டும், மேட்டுத்
தெரு சுப்பய்யா வீட்டுக் கொடிக்கா புளிக்கா மரத்தில் கல் எறிந்து கொடிக்கா
புளிக்கா பறித்துத் தருவதிலாகட்டும்,அத்தை அத்தைதான்.

சமயத்தில் அத்தைக்கும் அம்மாவுக்கும் முட்டிக்கொள்ளும்.
பெரும்பாலும் அம்மாவின் மீதுதான் தவறு இருக்கும்.

“ஏன் அத்தை, சொல்ல வேண்டியது தானே பாட்டிகிட்ட,” என மனம்
வெதும்பி நான் சொல்லிய சில வேளைகளில் கூட “ம்… அப்புறம் என்
செல்லக்குட்டிய அண்ணி எங்கூட விளையாட விடாட்டா நான் என்ன
செய்வேன்?” என்பாள் வேடிக்கையாக.

அம்மாவுக்கு எனக்கடுத்து தொடர்ந்து இரு பிள்ளைகள் பிறந்து, பிறந்த
மனை சென்றபோதும் தாயினும் மேலாக என்னை பார்த்துக் கொண்டவர் அத்தை.

எனக்கும் என் தங்கைக்கும் ஒரே சமயத்தில் அவளுக்குக் குழந்தை
பிறப்பும் எனக்கு அபார்ஷனுமாய் ஆகிப்போக, இருவரும் ஒருவர் முகத்தை
மற்றொருவர் பார்க்கக்கூடாது எனச் சொல்லிவிட்டனர். அவளுக்குத் தீட்டு
எடுக்கும்வரை அத்தை அவரின் புகுந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று பத்து நாள்
என்னைப் படுக்கையிலேயே படுக்க வைத்து உடல்தேற்றி மனம் மாற்றி தைரியம்
தந்தவள். ஆயிற்று. அத்தை தம் மகனுடன் ஹைதராபாத்தில் இரண்டு
வருடங்களுக்கு முன் குடியேறிவிட்டார். அதுமுதல் அவரைப் பார்ப்பது கடினம்
என்றாகிப் போனது. கடைசியாய் ஒன்றுவிட்ட சித்தப்பா பையனின்
திருமணத்துக்கு வந்திருந்தார்.

“சியாமளா… செத்த காப்பி எடுத்துட்டு வா,” மீனாட்சி வாசல் நுழையும்
முன்னே ஏவுகணை வேகத்தில் இவளிடம் வந்து சேர்ந்தன வார்த்தைகள்.காப்பி
கொடுத்தபடியே காதுக்குள் போட்டு முடித்தாள் சங்கதியை.

“தோ பாருடிம்மா… கலசம் நிறுத்தி நவராத்திரி கும்பிடுற பழக்கம் நம்மளது.
வர்ற சுமங்கலிகளுக்கு என்னைப் போன்றவளா தாம்பூலம் கொடுக்க முடியும்?
ஆம்பளைக்குக் கிருத்திகை ஆகாது. பொம்மனாட்டிக்கு அமாவாசை ஆகாது.
அமாவாசை தோ… கழியப் போவுது. சேதி ஒண்ணும் வரலியே, விடு.
அடுத்த அமாவாசை தாங்கும். அதான் பேச்சு மூச்சில்லாம இருக்காளே,
பார்த்து என்ன பண்ணப் போற? நவராத்திரி முடிய உங்கத்தையைப் பார்க்குற
சிந்தனை மட்டும் வெச்சுக்காதடிம்மா, கலசம் நிறுத்தியிருக்கு. பின்னாடி
குடும்பத்துக்கு ஆகாது,”பட்டாசாய்ப் பொரிந்த பேச்சுக்களூடே உள்மனத் தவிப்பை
எப்படி எடுத்து வைப்பது? முள்ளின் மேல் நடப்பவளாய் நாட்களைக்
கழித்தவள் நவராத்திரியும், பிள்ளைகளின் பரீட்சையும் ஒருசேர முடிய ரயிலில்
பிள்ளைகளுடன் புறப்பட்டாள்.

இதோ ஜங்ஷன் முடிந்து ஆட்டோ பிடித்து தெருமுனைக்கும் வந்தாயிற்று.

‘நீங்கள் உயிருடன் இருக்கும்போதே நான் இங்கு வந்திருக்கிறேன் அத்தை’
என்பதை அவள் ஸ்பரிசத்தின் மூலம் அவருக்கு உணர்த்த இன்னும் சில
நிமிடங்கள் போதும். எழுச்சியான அந்த உணர்ச்சியுடன் சியாமளா
ஆட்டோவிலிருந்து இறங்குகையில் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது
அத்தையைச் சூழ்ந்திருந்த சொந்தங்கள்,‘விட்டுட்டுப் போயிட்டியே’என்பதாய்.


நன்றி: கல்கி

No comments:

Post a Comment